ஷா ஆலம், அக் 7- அடுத்த வாரம் சுங்கை சிலாங்கூர் முதல் கட்ட நீர் சுத்திகரிப்பு மையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் ஏற்படக்கூடிய நீர் விநியோகத் தடையை எதிர் கொள்ள பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த நீர் விநியோகத் தடையினால் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரின் 998 பகுதிகளில் வரும் 13 ஆம் தேதி நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட நீர் மாசுபாடு பிரச்சனை காரணமாக உண்டான பாதிப்புகளை சரி செய்யும் முயற்சி பல முறை தாமதமான நிலையில் இம்மாதம் 13 ஆம் தேதி அப்பணிகளை மேற்கொள்ள மலேசிய நீர் சேவை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக ஏற்படும் நீர் விநியோகத் தடையை சமாளிப்பதற்காக போதுமான அளவு நீரை முன்கூட்டியே சேகரித்து வைக்கும் நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக பொது மக்களில் பலர் கூறினர்.
இந்த நீர் விநியோகத் தடை தொடர்பான தகவல் கிடைத்த தைத் தொடர்ந்து முன்கூட்டியே நீரை நிரப்பி வைப்பதற்காக கலன்களை தாம் தயார் செய்துள்ளதாக நோர் சலிம் (வயது 39) கூறினார்.
ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியரான அகமது ஜமால் அர்பீ (வயது 74) கூறுகையில், தங்கள் குடும்பத்திற்கு தேவையான நீரை முன்கூட்டியே சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகச் சொன்னார்.
இந்த நீர் விநியோகத் தடையை எதிர் கொள்ளும் வகையில் வரும் 13 ஆம் தேதி தொடங்கி போதுமான அளவு நீரை சேகரித்து வைத்துக் கொள்ளும்படி கோலாலம்பூர், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், உலு சிலாங்கூர், கோல லங்காட் மற்றும் கோல சிலாங்கூர் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வரும் 14 ஆம் தேதி மாலை 5.00 மணி முதல் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.








