ஷா ஆலம், அக் 7- ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப்பை பயன்பாட்டை தடுக்கும் கூட்டு நடவடிக்கைத் திட்டத்திற்கான தென் கிழக்காசியாவின் முன்னோடி நகராக ஷா ஆலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தயார் நிலை, கூட்டு இலக்கு, வர்த்தகம், தொழில்துறை, மற்றும் அரசாங்கத்தின் கடப்பாடு ஆகிய அம்சங்களின் அடிப்படையில் மலேசிய பசுமை தொழில்நுட்ப மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான மையம் (எம்.ஜி.டி.சி.) இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
அனைத்து துறைகளிலும் அன்றாடப் பணிகளிலும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப்பைகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மாநகர் மன்றம் சீராக மேற்கொண்டு வருவதாக அதன் வர்த்தகப் பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.
இது தவிர மறு சுழற்சி, வீடுகளில் குப்பைகளை தரவாரியாக பிரிப்பது, சமூக மறுசுழற்சி மையங்களை அமைப்பது ஆகியவற்றில் ஷா ஆலம் மாநகர் மன்றம் பரிமாற்றத் திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 21 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நெகிழிப்பை பயன்பாட்டை குறைப்பது மீதான மாநகர் மன்றம், எம்.ஜி.டி.சி. மற்றும் ஜெர்மனிய அமைப்பு ஆகியவை இயங்கலை வாயிலாக கலந்துரையாடல் நடத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


