ஷா ஆலம். அக் 7- மத்திய அரசுடன் கடந்த மாதம் செய்து கொள்ளப்பட்ட உருமாற்றம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை மீதான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மேம்பாடு குறித்து பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
அந்த ஒப்பந்தத்தின் அமலாக்கத்தில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டாலும் அதிலுள்ள ஒரு அம்சம் கூட இன்னும் நிறைவேற்றப்படாததால் அந்த ஒப்பந்தம் இன்னும் பலவீனமானதாகவே காணப்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அரசியல் நிலைத்தன்மை உறுதி செய்யப்பட்டதாக நாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.ஆனால், பிரதமர் கூறியதற்கு முரணாக ஜனநாயக உணர்வு, வெளிப்படைத் தன்மை மற்றும் ஒன்றுபட்டு செயல்படும் போக்கு ஆகியவற்றின் செயல்பாடுகள் காணப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழி மேம்பாடு காணப்பட்டுள்ளதாகவும் அரசியல் உஷ்ணம் குறைந்துள்ளதாகவும் வெளியிட்ட கருத்தை அமைச்சர் திருத்திக் கொள்ள வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மேம்பாடுகள் குறித்து நாங்கள் மனநிறைவு கொள்ளவில்லை என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். அதன் அமலாக்கம் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகிறது என்று மக்களவையில் தெரிவித்தார்.
அவையில் நேற்று, பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வதற்கும் முதலீட்டாளர்களைக் ஈர்ப்பதற்கும் அரசியல் நிலைத்தன்மை உதவியுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் (பொருளாதாரம்) டத்தோஸ்ரீ முஸ்தாபா முகமது கூறிய போது அன்வார் இடைமறித்து இவ்வாறு கூறினார்.
கடந்த மாதம் 13 ஆம் தேதி இந்த ஆறு அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூட்டரசு அரசாங்கமும் எதிர்க்கட்சி கூட்டணியான பக்கத்தான் ஹராப்பானும் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து நாட்டின் அரசியலில் புதிய வரலாறு படைக்கப்பட்டது.








