புத்ரா ஜெயா, செப் 5- சுங்கை செமினி ஆற்று நீரில் துர்நாற்றம் வீசுவதற்கு காரணமாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் தொழிற்சாலைக்கு எதிராக சிலாங்கூர் மாநில சுற்றுச்சூழல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பெரேனோங்கில் உள்ள உணவுப் பொருள் தயாரிப்பை அடிப்படையாக கொண்ட அந்த தொழிற்சாலையை இரு வாரங்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காசா எனப்படும் சுற்றுச்சூழல் மற்றும் நீர் வள அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
கடந்த மாதம் 31ஆம் தேதியும் இம்மாதம் 3 ஆம் தேதியும் சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையம் மூடப்படுவதற்கு காரணமாக இருந்தது தொடர்பில் அந்த தொழிற்சாலைக்கு எதிராக சிலாங்கூர் மாநில சுற்றுச்சூழல் துறை விசாரணை அறிக்கையை தயார் செய்துள்ளதாக அவ்வமைச்சு குறிப்பிட்டது.
இம்மாதம் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் சிலாங்கூர் மாநில சுற்றுச்சூழல் துறை மேற்கொண்ட சோதனையில் அந்த உணவுப் பொருள் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டதோடு அத்தொழிற்சாலையிலிருந்து தொழிலியல் கழிவுகளும் செமினி ஆற்றில் எடுக்கப்பட்ட நீரின் மாதிரியும் சோதனைக்காக மலேசிய இரசாயன இலாகாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அது தெரிவித்த து.
செமினி ஆற்றில் கடந்த மாதம் 31 ஆம் தேதி மற்றும் இம்மாதம் 3 ஆம் தேதிகளில் நீர் மாசுபாடு அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து புத்ரா ஜெயா, சிப்பாங், கோல லங்காட், உலு லங்காட் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களில் உள்ள 563 பகுதிகளில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.








