ஷா ஆலம், செப் 5- இவ்வாண்டில் 120,000 சிலாங்கூர் கூ வீடுகளை நிரமாணிப்பதற்கான விண்ணப்பங்களை சிலாங்கூர் மாநில அரசு பெற்றதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
அவற்றில் 60,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் ஒப்புதல் அளித்துள்ள வேளையில் 20,000 வீடுகள் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
கட்டுமானத் துறை செயல்படுவதற்கு அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் அமைச்சு தாமதமாக அனுமதி வழங்கிய காரணத்தால் சிலாங்கூர் கூ வீடமைப்புத் திட்டத்தை தொடர்வதில் தாமதம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
எனினும், இத்திட்டம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று ஹைக்கோமில் உள்ள மக்கள் குடியிருப்பு திட்ட (பி.பி.ஆர்.) பகுதியில் மக்கள் நட்புறவு சந்தைத் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக வேலை நேரத்திற்கு அப்பாலும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள பல மேம்பாட்டாளர்கள் தங்களிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் ரோட்சியா சொன்னார்.








