ஷா ஆலம், செப் 14- நாடாளுமன்ற துணை சபாநாயகர் எண்ணிக்கையை மூன்றாக அதிகரிப்பதற்கு ஏதுவாக அரசாங்கம் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவுள்ளது.
அந்த மூன்று பதவிகளில் ஒன்றை எதிர்க்கட்சி பிரதிநிதி வகிப்பதற்கு இந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் வகை செய்யும்.
இந்த உத்தேச திருத்தம் காரணமாக இன்று நடைபெறவிருந்த துணை சபாநாயகர் பதவிக்கான தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக நாடாளுமன்றம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜூனைடி துவாங்கு ஜாபர் கூறினார்.
தற்போது இரண்டாக உள்ள துணை சபாநாயகர் பதவிகளை மூன்றாக உயர்த்துவதற்கு ஏதுவாக அரசியலமைப்பு சட்டத்தின் 57(1)(பி) பிரிவில் திருத்தம் செய்யப்படும் என்று அவர் சொன்னார்.
நாடாளுமன்ற துணை சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் காரணத்தால் யார் அந்த பதவியை வகிப்பது என அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்படவில்லை. ஆகவே, அப்பதவியை வகிக்கும் மூவரில் ஒருவர் எதிர்க்கட்சி உறுப்பினராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் விதிகளை வகுக்கவுள்ளோம் என்றார் அவர்.
அந்த சட்டத் திருத்த மசோதாவை முதல் வாசிப்புக்கான அவையில் தாக்கல் செய்வதற்கும் வரும் அக்டோபர் மாதம் அதனை நிறைவேற்றுவதற்கும் தேசிய சட்டத் துறைத் தலைவருடன் நான் விவாதித்துள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.
துணை சபாநாயகர் பதவிக்கான தேர்வை ஒத்தி வைப்பது தொடர்பில் வான் ஜூனைடி கொண்டு வந்த தீர்மானத்தை பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர்.








