சபாக் பெர்ணம் , செப் 10- நெல் உற்பத்தி தரமாக இருப்பதை உறுதி செய்ய முறையான விதிமுறைகளை பின்பற்றி நெல் நடவில் ஈடுபடும்படி விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மற்ற பயிர்களைப் போலவே நெற்பயிர்களுக்கும் முறையான கவனிப்பும் அதிக பாதுகாப்பும் தேவைப்படுவதாக நவீன விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினயர் இஷாம் ஹஷிம் கூறினார்.
தரமான நெல் விதைகளும் தரமிக்க உரமும் இருந்தாலும் பயிரீட்டு நடவடிக்கையின் போது நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றாவிட்டால் எந்த பலனும் கிட்டாது என்றார் அவர்.
அதிகமான விளைச்சல் கிடைப்பதை உறுதி செய்ய வயல்களையும் பயிர்களையும் பாதுகாப்பதில் கட்டொழுங்கும் விதிகளை முறையாக பின்பற்றும் பக்குவமும் இருப்பது முக்கியம் என்றார் அவர்.
இங்குள்ள, பாரிட் 15, சிம்பாங் லீமா வாவாசான் தானி பெர்ஹாட் கூட்டுறவுக் கழகத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பயிர்த் தொழிலில் முறையான கட்டொழுங்கை கடைபிடித்த விவசாயிகளை அங்கீகரிக்கும் வகையில் அத்துறை சார்ந்தவர்களுக்கு மைகேப் தரச்சான்றிதழைப் பெற்றுத் தருவதற்கான முயற்சியில் தமது தரப்பு ஈடுபடும் என்றும் அவர் சொன்னார்.








