ஷா ஆலம், ஆக 11- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் பதிந்து கொண்டுள்ள கோலக் கிள்ளான் தொகுதியைச் சேர்ந்த 18 வயதுக்கும் மேற்பட்ட உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் வரும் வியாழக்கிழமை முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெறுவர்.
இங்குள்ள செக்சன் 19, டி பல்மா ஹோட்டலில் உள்ள தடுப்பூசி மையத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி கூறினார்.
உள்நாட்டினர், வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் கட்டுமானத் தொழில்துறை ஊழியர்களை இலக்காக கொண்டு இந்த செல்வேக்ஸ் திட்டத்திற்கான பதிவு நடவடிக்கை கடந்த வாரம் தொடங்கி மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
வருகைக்கான முன்பதிவின்றி தடுப்பூசி பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் எளிதாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக தாங்கள் பதிவு நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் மேலும் சொன்னார்.
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கை அண்மைய காலமாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தடுப்பூசி பெற்றவர்கள் உள்பட அனைவரும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.








