ஷா ஆலம், ஆக 11- சிலாங்கூரில் அடுத்த தலைமுறையில் விளையாட்டாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்கான புதிய செயல்திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தவுள்ளது.
தேசிய நிலையிலும் ஒலிம்பிக் போட்டியிலும் பிரகாசிக்கக்கூடிய புதிய விளையாட்டாளர்களை உருவாக்குவதற்காக சிலாங்கூர் விளையாட்டு மன்றத்துடன் தாங்கள் இணைந்து செயல்படவுள்ளதாக விளையாட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார்.
விளையாட்டாளர்களின் ஆற்றலை மதிப்பிடும் தகுதி மாநில விளையாட்டு மன்றத்திற்கு மட்டுமே உள்ளது. அம்மன்றத்தின் துணையின்றி நாம் தனித்து செயல்பட முடியாது. மாநில விளையாட்டு மன்றத்திற்கும் மாநில அரசுக்கும் இடையிலான உறவு சீராக இருந்தாலும் அதனை சற்று செம்மைமப்படுத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.
விளையாட்டு முறையின் கட்டமைப்பையும் செயல்முறையையும் சீரமைக்கும் பணியை நாம் மேற்கொள்ளவுள்ளோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் விளையாட்டாளர்கள் மற்றும் விளையாட்டுத் துறை சேர்ந்தவர்களுக்கு இங்குள்ள டி பல்மா ஹோட்டலில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.








