ECONOMY

தஞ்சோங் சிப்பாட் தொகுதியில் எண் வரிசை முறையில் அந்நிய நாட்டினருக்கு தடுப்பூசி

7 ஆகஸ்ட் 2021, 8:45 AM
தஞ்சோங் சிப்பாட் தொகுதியில் எண் வரிசை முறையில் அந்நிய நாட்டினருக்கு தடுப்பூசி

பந்திங், ஆக 7- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் கீழ் வருகைக்கான முன்பதிவின்றி தடுப்பூசி பெற வரும் அந்நிய நாட்டினருக்கு எண் வரிசை முறையை தஞ்சோங் சிப்பாட் தொகுதி அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்தொகுதியில் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும் தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி சீராக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கும் ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று தொகுதி உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா கூறினார்.

அந்நிய நாட்டினருக்கு தஞ்சோங் சிப்பாட் தொகுதியின் முத்திரையிடப்பட்ட அட்டை வழங்கப்படும். அந்த அட்டையில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் தடுப்பூசி பெறுவதற்கு அவர்கள் வரவேண்டும். அதே சமயம் மலேசிய பிரஜைகள் நேரடியாக முகப்பிடத்தில் தடுப்பூசிக்கு பதிவு செய்து கொள்ளலாம் என்றார் அவர்.

பந்திங் பாரு, எம்.பி.கே.எல். மண்டபத்தில் உள்ள தடுப்பூசி மையத்தில் நேற்று முன்தினம் வெளிநாட்டினர் உள்பட 800 பேர் தடுப்பூசி பெற்ற வேளையில் நேற்று அந்த எண்ணிக்கை 1,000 ஆக உயர்ந்ததாக அவர் சொன்னார்.

இந்த செல்வேக்ஸ் கம்யூனிட்டி தடுப்பூசித் திட்டத்தை மோரிப், பந்திங் மற்றும் சிஜங்காங் ஆகிய தொகுதிகளுடன் இணைந்து மறுபடியும் மேற்கொள்ள தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.