ஷா ஆலம், ஆக 1- சிலாங்கூர் மாநில அரசின் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் கீழ் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 12 தொகுதிகளில் இம்மாதம் 2 ஆம் தேதி முதல் நேரடியாக தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் தடுப்பூசி பெறுவதை விரைவுபடுத்துவதற்காக சம்பந்தப்பட்ட தொகுதிகளில் இந்த நேரடி தடுப்பூசித் திட்டம் அமல்படுத்தப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இத்திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் உள்ள தடுப்பூசி மையங்களில் நாளொன்றுக்கு 1,300 தடுப்பூசிகள் வீதம் இரு தினங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை இதன் மூலம் விரைவுபடுத்த முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்துவதற்காக சிலாங்கூர் மாநில அரசு சுமார் 20 கோடி வெள்ளி செலவில் 25 லட்சம் தடுப்பூசிகளை சொந்தமாக கொள்முதல் செய்துள்ளது.
தொழிற்சாலை ஊழியர்களை உள்ளடக்கிய செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டத்திற்கு 20 லட்சம் தடுப்பூசிகளும் செல்வேக்ஸ் கம்யூனிட்டி எனப்படும் பொது மக்களுக்கான தடுப்பூசித் திட்டத்திற்கு 500,000 தடுப்பூசிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் தடுப்பூசி பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும்.
சிலாங்கூரில் நேரடியாக சென்று தடுப்பூசி பெறுவதற்கான வசதி கொண்ட தடுப்பூசி மையங்கள் பின்வருமாறு-
- Dewan Banting Baru, Morib 2. Dewan Pandan Indah 3. Dewan Majlis Bandar Baru, Kuala Selangor 4. Dewan Dato’ Abdul Hamid, Batang Kali 5. Dewan Sekolah Cina, Ijok 6. Dewan Orang Ramai Hulu Bernam 7. Dewan Seri Siantan, Selayang 8. Dewan Sri Cempaka Kajang 9. Dewan Eng Ann, Klang 10. Dewan Komuniti Putra Perdana, Dengkil 11. Dewan MRSM Sungai Besar 12. Dewan MPAJ AU5, Ampang


