ஷா ஆலம், ஜூலை 7- குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த 151,729 பேர் குறைந்தது ஒரு தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதார அமைச்சின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பெக்கா பி40 எனப்படும் சுகாதார பரிசோதனைத் திட்டத்தின் கீழ் 457,462 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில் 33 விழுக்காட்டினர் நோய்ப் பாதிப்பை கொண்டிருப்பது தெரியவந்ததாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ஆடாம் பாபா கூறினார்.
தாங்கள் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதை அவர்கள் இவ்வளவு நாட்கள் அறியாமல் இருந்துள்ளனர் என்று 2019/2020 ஆம் ஆண்டிற்கான பெக்கா பி40 அறிக்கையை இயங்கலை வாயிலாக வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அச்சோதனையில் நீரிழிவு நோய் (10.4 விழுக்காடு), கொலஸ்ட்ரோல் அதிகரிப்பு (29.8 விழுக்காடு), உயர் இரத்த அழுத்தம் (13.8 விழுக்காடு), மனநல பாதிப்பு (1.6 விழுக்காடு), மனசஞ்சலம் (1.4 விழுக்காடு) ஆகிய தொற்றா நோய்களால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்றார் அவர்.
இந்த பெக்கா பி40 சோதனை திட்டத்திற்கு முன்னர் அவர்கள் எந்த மருத்துவ பரிசோதனையையும் மேற்கொண்டதில்லை. ஆகவே நோய்க்கான தொடர் சிகிச்சையை பெறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு ஏற்படவில்லை என்று அவர் மேலும் சொன்னார்.
புரொடெக்ஹெல்த் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் இந்த பெக்கா பி40 திட்டத்தின் வழி நான்கு அனுகூலங்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. மருத்துவ பரிசோதனை, மருத்துவ உபகரணங்கள் வாங்க 20,000 வெள்ளி வரை நிதியுதவி, புற்றுநோய் சிகிச்சைக்கான உதவி தொகை (1,000 வெள்ளி), 1,000 வெள்ளி வரையிலான போக்குவரத்து உதவித் தொகை ஆகியவையே அந்த நான்கு அனுகூலங்களாகும்.








