ஷா ஆலம், ஜூன் 18- சிலாங்கூரிலுள்ள 371 கிராமங்களைச் சேர்ந்த 18,550 குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களுக்கு அத்தியாவசிய மற்றும் சத்துணவுப் பொருள்கள் வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பான பரிந்துரை அறிக்கை மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்று புறநகர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் புர்ஹான் அமான் ஷா கூறினார்.
இத்திட்டத்தின் படி ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் 30 முதல் 40 குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பொருள்கள் வழங்கப்படும்
இது தவிர கோவிட்-19 நோய்த் தொற்றை எதிர்கொள்வதற்கு ஏதுவாக சிறார்களுக்கு வைட்டமின் மாத்திரைகளை வழங்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என்றார் அவர்.
இந்த பரிந்துரையை மாநில ஆட்சிக்கு ஏற்றுக் கொண்டால் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் இந்த உதவித் திட்டம் அமல்படுத்தப்படும் என அவர் சொன்னார்.








