ஷா ஆலம், ஜூன் 17- கூடியவிரைவில் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சட்டமன்ற சபாநாயகருடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சட்டமன்றக் கூட்டத்தை நடத்துவதற்கான அனுமதியை பெறுவதற்காக அந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களிடம் முன்வைக்கப்படும் என்று அமிருடின் சொன்னார்.
மாட்சிமை தங்கிய பேரரசர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் இந்த நிலைப்பாடு அரசியலமைப்பு ஜனநாயக முறையை தற்காப்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதன்வழி நிர்வாகம், அரசியல் மற்றும் நீதித் துறையில் சரிபார்த்து சமன் செய்யும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்குரிய வாய்ப்பும் ஏற்படும் என அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மதிப்பீடு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும் மற்றும் கூட்டரசு அரசியலமைப்பு முறை காக்கப்பட வேண்டும் என்ற பொது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவும் மாமன்னரின் அந்த உத்தரவு அமைந்துள்ளதாக அவர் மேலும் சொன்னார்.
அதோடு மட்டுமின்றி மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரம் மீது மாமன்னருக்கும் மலாய் ஆட்சியாளர்களுக்கும் உள்ள அக்கறை மற்றும் பரிவையும் இந்த உத்தவின் மூலம் உணர முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்பட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் நேற்று உத்தவிட்டார். நேற்று மலாய் ஆட்சியாளர்களுடன் சந்திப்பு நடத்திய பின்னர் இந்த உத்தரவை அவர் பிறப்பத்தார்.








