கோலாலம்பூர், ஜூன் 11- தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வரை நாட்டில் மொத்தம் 12 லட்சத்து 67 ஆயிரத்து 758 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
இது தவிர, 28 லட்சத்து 35 ஆயிரத்து 178 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் வழி முதலாம் தடுப்பூசி மற்றும் இரண்டாம் தடுப்பூசியைப் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 41 லட்சத்து 2 ஆயிரத்து 936ஆக உயர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.
சிலாங்கூரில் 165,516 பேரும் சவராவில் 130,641 பேரும் கோலாலம்பூரில் 118,255 பேரும் ஜோகூரில் 117,725 பேரும் பேராக்கில் 155,298 பேரும் இந்த தடுப்பூசித் திட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை மேற்கொள்ளப்பட்ட முதலாவது தடுப்பூசி திட்டத்தில் சுமார் ஐந்து லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை நடைபெறும் இரண்டாம் கட்டத் தடுப்பூசித் திட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட 94 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.








