ஷா ஆலம், ஜூன் 7- குப்பைகளை அகற்றும் பணியை எளிதாக மேற்கொள்வதற்கு ஏதுவாக தங்கள் வாகனங்களை முறையான இடங்களில் நிறுத்தி வைக்கும்படி குடியிருப்பாளர்களை கே.இ.டி.பி. வேஸ்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் அதிகரித்துள்ள வாகனங்களின் எண்ணிக்கை லோரிகள் மூலம் வீடு வீடாகச் சென்று குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொள்வதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.
முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட முதல் நான்கு நாட்களில் குடியிருப்பு பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரிதுள்ளது. பல வீட்டிலிருந்து வேலை செய்வது இதற்கு காரணமாக உள்ளது.
ஆகவே, குப்பை அகற்றும் பணியை எளிதாக மேற்கொள்வதற்கு ஏதுவாக குறுகலான சாலைகளில் குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் தங்கள் வாகனங்களை முறையான இடங்களில் நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.
வழக்கமான நாட்களை காட்டிலும் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட இந்த இரு வார காலத்தில் வீடுகளில் சேரும் குப்பையின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இக்காலக்கட்டத்தில் உணவகங்கள் திறக்கப்படாத காரணத்தால் பலர் வீடுகளில் உணவு சமைப்பதிலும் இணையம் வழி கடைகளிலிருந்து வாங்குவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் பிளாஸ்டிக் மற்றும் காகிதம் போன்ற குப்பைகளின் அளவு அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.








