கோலாலம்பூர், ஜூன் 4- நாட்டில் முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்பட்ட நிலையிலும் அதிகமான வாகனங்கள் சாலைகளில் பயணிப்பதை கருத்தில் கொண்டு நாட்டில் குறிப்பாக கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் அதிகமான சாலைத் தடுப்புகளை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இவ்விரு மாநிலங்களிலும் தினசரி ஆயிரம் சாலைத் தடுப்புகள் வரை ஏற்படுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.
தற்போது ஓப்ஸ் பெந்தேங் நடவடிக்கையின் கீழ் 930 சாலைத் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை நான் நேற்று நேரில் கண்டேன். குறிப்பிட்ட இடங்களில் குறிப்பாக, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் அதிகமான சாலைத் தடுப்புகளை ஏற்படுத்துவது குறித்து தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ அக்ரில் சானியுடன் விவாதித்துள்ளேன் என்றார் அவர்.
சிலாங்கூர், கோலாலம்பூர் தவிர்த்து பினாங்கிலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதை காண முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
நாட்டில் அபரிமிதமாக அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த் தொற்றைத் தடுக்கும் விதமாக அரசாங்கம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தியுள்ளது.








