புத்ரா ஜெயா, ஜூன் 1- முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கத்தின் எதிரொலியாக புத்ரா ஜெயாவிலுள்ள ஏழு சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படுகின்றன.
தாமான் சபாரான் மற்றும் டெங்கில் செல்லும் ஜாலான் பி5, பிரிசின்ட் 11 செல்லும் ஜாலான் ரெசாம், சைபர் ஜெயா நோக்கிச் செல்லும் ஜாலான் பி11ஜே, பாங்கி சுங்கை மேராப் செல்லும் ஜாலான் பி14, புத்ரா ஜெயா சென்ட்ரல் செல்லும் ஜாலான் பி7ஏ, டெங்கில் நோக்கிச் செல்லும் ஜாலான் பி5 ஆகியவையே மூடப்படும் சாலைகளாகும்.
புத்ரா ஜெயா நகருக்குள் வாகனங்கள் நுழைவதையும் அங்கிருந்து வெளியேறுவதையும் தடுக்கும் நோக்கில் இந்த சாலைத் தடுப்புகள் அமைக்கப்படுவதாக புத்ரா ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது பட்சில் அலி கூறினார்.
நேற்றிரவு இங்குள்ள சுங்கை மேராப் பகுதியில் சாலைத் தடுப்பு பணிகளை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தின் பாங்கி, சிப்பாங் மற்றும் பூச்சோங்கிலிருந்து புத்ரா ஜெயா வருவதற்கான முக்கிய வழித்தடங்களாக விளங்கும் காரணத்தால் அச்சாலைகள் மூடப்படுகின்றன என்றும் அவர் சொன்னார்.








