ஷா ஆலம், மே 31- இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு 1,223 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை பதிவான மரணச் சம்பவங்களை விட இது மிக அதிகமாகும்.
கோவிட்-19 நோய்த் தொற்றினால் கடந்தாண்டு முழுவதும் 471 மரணச் சம்பவங்கள் பதிவான வேளையில் இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் 2,179 பேர் மரணமடைந்ததாக சுகாதார அமைச்சு கூறியது.
கடந்த 2020ஆம் ஆண்டு முழுவதும் 471 பேர் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பலியாகினர். ஆனால் இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் அந்த எண்ணிக்கை 2,179 ஆக உயர்வு கண்டது. இம்மாதம் முதல் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை 1,144 பேரை இந்நோய்த் தொற்று பலி கொண்டுள்ளது என அமைச்சு டிவிட்டர் வழி வெளியிட்ட அறிக்கை கூறியது.
இதனிடையே, நோய்த் தொற்று பரவியது முதல் மிக அதிகமாக அதாவது 98 மரணச் சம்பவங்கள் நேற்று முன்தினம் பதிவானதை சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா, நோய்த் தொற்று வரலாற்றில் அது ஒரு கருப்பு தினமாகும் என வருணித்தார்.
நோய்த் தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதாக கூறிய அவர், சவக்கிடங்குகளில் போதுமான இடம் இல்லாத காரணத்தால் இறந்தவர்கள் உடல்களை வைக்க கொள்கலன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார்.


