புத்ரா ஜெயா, மே 29- முழு அளவிலான பொது முடக்க காலத்தில் தேவையான அளவு அத்தியாவசிய உணவுப் பொருள் கையிருப்பு உள்ளதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி உத்தரவாதம் அளித்துள்ளார்.
கடந்த முறை அமல் படுத்தப்பட்ட முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது உணவு பொருள் விநியோகம் துண்டிக்கப்படும் நிலை உண்டாகவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்..
ஆகவே, இம்முறை அமல்படுத்தப்படும் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது போதுமான அளவு அத்தியாவசிய உணவுப் பொருள் கையிருப்பு இருக்கும் என அமைச்சு நம்புகிறது என்றார் அவர்.
பதற்றத்தில் அதிக அளவில் பொருள்களை வாங்கி குவிக்க வேண்டாம் என பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் வர்த்தக மையங்களில் பொருள் விநியோக தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
அனைத்து மாநிலங்களிலும் அத்தியாவசியப் பொருள்கள் போதுமான அளவு உள்ளதை உறுதி செய்வதற்காக அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் தினசரி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்றும் அவர் தெரிவித்தார்.








