கோல லங்காட், மார்ச் 4- கோல லங்காட் செலாத்தான் சதுப்பு நிலப் பகுதியில் ஏற்பட்ட தீ இன்னும் ஐந்து நாட்களில் முற்றாக அணைக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.
அந்த காட்டின் எல்லையில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி 60 விழுக்காடு முழுமையடைந்து விட்டதாக அத்துறையின் இயக்குநர் நோரஸாம் காமிஸ் தெரிவித்தார். சுமார் 100 ஏக்கர் அளவுக்கு தீ பரவியுள்ளதாக இங்குள்ள கோல லங்காட் செலாத்தான் வனப்பகுதியில் மேற்கொள்ளப்படும் தீயணைப்பு பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
தீ புதிய இடங்களுக்கு பரவாத பட்சத்தில் இன்னும் சில தினங்களில் தீயை முற்றாக கட்டுப்படுத்திவிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு தீயணைப்பு நடவடிக்கையில் பல்வேறு துறைகளை சேர்ந்த 135 அதிகாரிகளும் பணியாளர்களும் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.






