ஷா ஆலம், பிப் 25- புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியில் உள்ள சுமார் 1,400 பேருக்கு உணவுப் பொருள் உதவி வழங்கப்படவுள்ளது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பொருளாதார ரீதியில் நலிவடைந்திருக்கும் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறுவோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கட்டங் கட்டமாக இந்த உதவி வழங்கப்படும் என்று புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.
அரிசி, சமையல் எண்ணெய், கிச்சாப், காப்பி, சார்டின், கோழி மற்றும் முகக் கவசம் உள்ளிட்ட பொருள்கள் அந்த உதவிப் பொருள் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது என்று அவர் சொன்னார்.
இதுவரை 750 பேருக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்ட வேளையில் எஞ்சியோருக்கு கட்டங் கட்டமாக அப்பொருள்கள் விநியோகம் செய்யப்படும். இந்த உதவிப் பொருள்கள் வசதி குறைந்தவர்களின் சுமையை ஓரளவு குறைக்க உதவும் என நம்புகிறோம் என்றார் அவர்.
மக்கள் பரிவுத் திட்டத்தின் கீழ் இத்தகை உணவு பொருள் உதவித் திட்டத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக மாநிலத்திலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா ஒரு லட்சம் வெள்ளியும் 22 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தலா ஐம்பதாயிரம் வெள்ளியும் வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 20ஆம் தேதி அறிவித்திருந்தார்.








