கிள்ளான், பிப் 24- செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் 55 இடங்களை சிலாங்கூரில் குப்பைகளை அகற்றும் பணிக்கு பொறுப்பேற்றுள்ள கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் கடந்தாண்டில் அடையாளம் கண்டுள்ளது.
சுங்கை ஜாத்தி, புக்கிட் நெனாஸ். லபோஹான் டகாங், அண்டலாஸ் ஆகிய பகுதிகள் குப்பைகள் கொட்டும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி முகமது இட்ரிஸ் முகமது யூசுப் கூறினார்.
இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக சிறப்பு பணிக்குழு ஒன்று ஆறு மாத காலத்தில் ஆரம்பிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
இந்நோக்கத்திற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படும். சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டும் செயல்கள் தொடரும் என்றபோதிலும் அதனைக் கட்டுப்படுத்துவதில் தமது நிறுவனம் கடப்பாடு கொண்டுள்ளது என்றார் அவர்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வரை சட்டவிரோதமாக குப்பை கொட்டுவது தொடர்பில் 874 புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது கூறியிருந்தார்.
கிள்ளானில் அதிகமாக அதாவது 346 சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக கூறிய அவர், இக்குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டதாக சொன்னார்.







