புத்ராஜெயா, ஏப்ரல் 25:
வெளிநாட்டில் இருந்து திரும்பிய மலேசியர்களை தனிமைப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை கோவிட்-19 நோய் பரவலை தடுப்பதில் வெற்றியை கொடுத்தது என மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். இந்த நடவடிக்கை இறக்குமதி வழி புதிய கிளஸ்தர் ஏற்படுவதை தடுக்க உதவியது என்று அவர் விவரித்தார். கடந்த ஏப்ரல் 3-இல் மலேசியாவிற்கு திரும்பியவர்களில் 131 நபர்களுக்கு கோவிட்-19 நோய் தொற்றி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.
" நான் முன்பு சொன்னது போல், அப்படி 131 பேர்களை தனிமைப்படுத்தவில்லை என்றால் புதிய கிளஸ்தர் மூலம் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மற்றவர்களுக்கு பரவி இருக்கும். நாம் வெளிநாட்டில் இருந்து திரும்பிய மலேசியர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை சரியான ஒன்று," என்று இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு இஸ்மாயில் சப்ரி பேசினார்.


