புத்ராஜெயா, ஏப்ரல் 25:
நமது நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையை முடுக்கி விட்டது மட்டுமின்றி 'எலிப் பாதைகள்' எனப்படும் சட்ட விரோதமாக நுழையும் வழிகளையும் கண்காணிக்க வேண்டும் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். மலேசிய நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிப்பதை நாம் சகித்துக் கொள்ள முடியாது என விவரித்தார். நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) தொடங்கியது முதல் 'எலிப் பாதைகள் ' வழி நாட்டிற்கு நுழைந்த 84 சட்ட விரோத குடியேறிகளை கைது செய்துள்ளதாகவும் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
" அரசாங்கம் எப்போதும் நாட்டின் எல்லை பாதுகாப்பு தொடர்பில் மிகவும் கண்டிப்பான போக்கை கடைபிடித்து வருகிறது. ஆகவே, 'எலிப் பாதைகள்' வழி நாட்டிற்கு நுழைவதை தடுக்க பலமான பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்துவதை அரசாங்கம் உறுதி செய்யும். அரசாங்கத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இலாகா மற்றும் அரசு இயங்திரங்கள் நாட்டின் எல்லைகளை கண்காணிப்பதில் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும். இதன் மூலம் சட்ட விரோதமாக நுழைய முயற்சிக்கும் அந்நியர்கள் கோவிட்-19 நோயை நாட்டிற்கு கொண்டு வருவதை தடுக்க முடியும்," என புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு இஸ்மாயில் சப்ரி பேசினார்.


