கோலாலம்பூர், செப் 9 - சரவாக், உலு பெர்னாம் லொங் லெல்லாங் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அனைத்து ஐந்து குடும்பங்களுக்குத் தேவையான அனைத்துவித உதவிகளையும் அரசாங்கம் வழங்கும்.
இன்று தமது ஃபேஸ்புக் பதிவின் மூலம் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்த உறுதியை வழங்கினார்.
நேற்று மாலை, விமானி, சுகாதார அமைச்சின் நான்கு பணியாளர்கள் ஆகியோரை ஏற்றியிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அனைவரும் உயிரிழந்த சம்பவம், தம்மை மிகவும் பாதித்திருப்பதாக அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

கூச்சிங்கிலிருந்து 929 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உலு பெர்னாம், லொங் லெல்லாங் விமான நிலையத்திற்கு அருகில் BO -105 ஹெலிகப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது .
மீரியிலிருந்து புறப்பட்ட அந்த ஹெலிகாப்டரில் பணியின் காரணமாக மருத்துவர், உதவி மருத்துவர், இரு தாதியர்கள் பயணித்ததை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
இதுவரை குடும்பத்தினரால், உயிரிழந்தவர்களில் இருவர் கேப்டன் சய்னோல் அஃபிக் பி ஷாம் ( வயது 31 ), மருத்துவர் டாக்டர் அய்னுல் பாரா கமாருடின் ( வயது 32 ) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



