கோலா லங்காட், செப் 8 : சிலாங்கூர் மாநில அரசு, மாநிலத்தில் உள்ள தரவு மையங்களின் (Data Centers) வளர்ச்சியை, குறிப்பாக அந்தத் தொழில்துறைக்கான நீர் மின்சார விநியோகத் திறன் குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
பொதுமக்களின் கவலைகளை மாநில அரசு தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்றும், நீர் - மின்சார விநியோகம் போதிய அளவில் இல்லையென்றால் எந்தவொரு தரவு மையத் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்படாது என்றும் மாநில மெந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
"ஒவ்வொரு தரவு மையக் கட்டுமான விண்ணப்பம், கூட்டரசு அரசாங்கத்தின் கீழ் உள்ள தரவு மைய பணிக்குழுவின் (Data Center Task Force) ஒப்புதலைப் பெற வேண்டும்.
மேலும் அவர்கள் நீர்- மின்சார விநியோகிப்பாளர்களிடம் இருந்து அனுமதியைப் பெற வேண்டுமென்று என்று அவர் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
முன்னதாக, அவர் தஞ்சோங் துவா பெலாஸில் நடைபெற்ற NSIP விவேக தொழில்துறை பூங்காவின் முதலாம் கட்டத்துக்கான சாவிகளைகளை வழங்கியதோடு, அப்பூங்காவின் இரண்டாம் கட்டத் தொடக்க விழாவையும் நிறைவு செய்தார்.
தற்போதைக்கும் எதிர்காலத்துக்குமான நீர் விநியோகக் கையிருப்பு , மாநிலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடுமென மாநில அரசு நம்புகிறது.
குறிப்பாக ராசாவ் நீர் விநியோகத் திட்ட செயலாக்கத்தின் மூலம் ஒரு நாளைக்கு கூடுதலாக 350 மில்லியன் லிட்டர் நீர் விநியோகத் திறன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சிலாங்கூர் மாநில அரசு தரவு மைய நடத்துநர்கள், நீர் மறுசுழற்சி முறைகளைப் பயன்படுத்தவும், குளிர்விக்கும் நோக்கத்திற்காக நீர் பயன்பாட்டைக் குறைக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் ஊக்குவிக்கிறது என்று அமிரூடின் ஷாரி கூறினார்.
தற்போது தரவு மையங்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தாலும், அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன, விநியோகமும் போதுமானதாக உள்ளது," என்றாரவர்.
2021 முதல் 2025 வரையிலான கால கட்டத்தில் சிலாங்கூரில் மொத்தம் 39 தரவு மையத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2,400-க்கும் மேற்பட்ட நிரந்தர வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.




