ஷா ஆலம், செப் 6 : சிலாங்கூரில் காற்றுத் தூய்மைக் கேடு குறியீடு (IPU) மிக அதிகமாகப் பதிவாகும் பகுதிகளுக்கு முகக்கவசங்களை வழங்க மாநில அரசு தயாராக உள்ளது.
இந்த முகக்கவசங்கள் மாவட்ட பேரிடர் நிர்வாகக் குழுவிடம் (JPBD) ஒப்படைக்கப்பட்டு, அரசு ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும், குறிப்பாகத் தேவைப்படுபவர்களுக்கு விநியோகிக்கப்படும் என பொது சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீன் தெரிவித்தார்.
இதனிடையே, குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், மற்றும் இருதய நோய் அல்லது சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள பிரிவினர், உடற்பயிற்சி மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைப்பதன் மூலம் புகை மூட்ட தாக்கத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெளியில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், பொருத்தமான முகக்கவசங்களைப் பயன்படுத்த வேண்டும்," என்று ஜமாலியா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
கல்வித் துறையைப் பொறுத்தவரை, பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் தற்போதைய IPU குறியீட்டின் அடிப்படையில் நடைமுறையில் உள்ள விதிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று ஜமாலியா கூறினார்.
"IPU குறியீடு 200-ஐத் தாண்டினால், அதிகாரிகளின் உத்தரவின்படி பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் மூடப்படும்.
சிலாங்கூர் மாநில கல்வித் துறை பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள IPU நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து, மாசுபாட்டின் அளவு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்குமென்றாரவர்.




