புத்ராஜெயா, செப் 6 : செயலியின் மூலம் போக்குவரத்து சேவையை வழங்கும் நிறுவனங்கள், பெண் பயணிகளுக்கு பிரத்தியேகமாக பெண் வாகன ஓட்டுநர்களை ஏற்படுத்தி தரும் வசதியை உருவாக்கித் தர வேண்டுமென, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அச்சேவையைப் பயன்படுத்தும்போது, பெண் பயணிகள் பாதுகாப்பாக உணர அந்த வசதியை ஏற்படுத்தி தருவது முக்கியமென அவர் கூறினார்.
அதோடு , வாகனப் பகிர்வு முறையின் கீழ், பெண்கள், இதர பெண் பயணிகளுடன் மட்டுமே பயணத்தைப் பகிரும் அணுகுமுறையையும் ஆராயும்படி அவர் , போக்குவரத்து சேவை வழங்குநர்களை கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, ரயில் போக்குவரத்து சேவை குறித்து கருத்துரைத்த அவர், பெண் பயணிகளுக்கென சிறப்பு ரயில் பெட்டியை ஒதுக்கியிருப்பதன் வாயிலாக அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதாகக் கூறினார்.
பரபரப்பான நேரங்களில், ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகள், பாலியல் தொல்லைக்கு ஆளாகுவதாக தமதமைச்சு தொடர்ந்து புகார்களைப் பெற்று வருவதாக லோக் குறிப்பிட்டார்.
ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளில் மூன்றில் இரு பகுதியினர் பெண்களாக உள்ளனர். அதையடுத்து அவர்களின் பாதுகாப்பு முக்கியமாக கருதப்படுவதாக அவர் கூறினார்.
டி.எ.பி கட்டியின் தேசிய மகளிர் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றும்போது, அக்கட்சியின் தலைமைச் செயலாளருமான அந்தோணி லோக் இவ்வாறு பேசினார்.



