கோலாலம்பூர், செப் 4 : கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, 'பருவநிலை இழப்பீடு' கோருவதற்கு நேபாளத்திற்கு முழு உரிமை உண்டு என்று பொதுச் சுகாதார நிபுணர் பேராசிரியர் டாக்டர் ரொசிதா ஹோட் தெரிவித்துள்ளார்.
நேபாளம் போன்ற நாடுகள், உலகளாவிய பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கத்தினை உணர்வதால் , அந்த இழப்பீட்டுக் கோரிக்கை நியாயமானதே என மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் மருத்துவப் புலத்தைச் சேர்ந்த அவர் கூறினார்.

உலகளாவிய நிலையில், கரியமிலவாயு வெளியேற்றத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்யும் வளர்ந்த நாடுகளும் உலகின் முக்கிய பொருளாதார நாடுகளும் இதற்கு அதிக பொறுப்பேற்க வேண்டிய கடமையைக் கொண்டுள்ளன என்றும் அவர் வலியுறுத்தினார்.
உலகிலேயே, மிக அதிக அளவில் கரியமிலவாயுவை வெளியிடும் நாடுகள் அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தான் என்பதை உலகளாவியத் தரவுகள் காட்டுகின்றன.
வளர்ச்சி கண்ட நாடுகளாக இருக்கும் இவர்களே அதிக கரியமிலவாயுவை வெளியிடுவதால், நெறிமுறை மற்றும் பருவநிலை நீதியின் அடிப்படையில் அவர்களே அதற்குப் பொறுப்பாவார்கள் என்றும் டாக்டர் ரொசிதா கூறினார்.
அனைத்துலக அளவில் அதற்கான இழப்பீட்டினைப் பெறுவதற்கான வழிகளை, சம்பந்தப்பட்ட நாடுகளுக்குப் பொருந்தும் சட்டக் கட்டமைப்புகளின் மூலம் ஆராய முடியும் என்றும் அவர் விளக்கினார்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு வளர்ச்சி கண்ட நாடுகள் அதிகம் பொறுப்பேற்க வேண்டும் என்ற நேபாளத்தின் நிலைப்பாட்டிற்கு மலேசியாவும் மற்ற நாடுகளும் ஒன்றிணைந்து ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மலேசியா, பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநாவின் கட்டமைப்பு உடன்படிக்கையை 1994 -ஆம் ஆண்டிலும், பாரிஸ் ஒப்பந்தத்தை 2016-இலும் ஏற்றுக்கொண்டுள்ளது.
இத்தகைய அனைத்துலக உடன்படிக்கைகளின் கீழ், பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய வளரும் நாடுகளுக்கு உதவுவதற்காகவே அனைத்துலக அளவில் 'இழப்பு மற்றும் சேதத்திற்கான நிதி' உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செராஸ்-சில், மருத்துவமனை ஒன்றில் நடைபெற்ற சிறப்பு உரைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ரொசிதா இவ்வாறு கூறினார்.
முன்னதாக, நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல், அனைத்துலக நாடுகள் வழங்கும் உதவிகள் வெறும் தொண்டு உதவியாக அல்லது நலத்திட்டமாக இல்லாமல் பருவநிலை இழப்பீடாகவே வழங்கப்பட வேண்டும் என்று அனைத்துலக சமூகத்தை வலியுறுத்தியிருந்தார்.






