கோலாலம்பூர், செப்.4: சட்டங்களை இயற்றுதல், வரவு-செலவுத் திட்டத்தை நிர்ணயித்தல் மற்றும் பொருத்தமான கொள்கைகளை வகுத்தல் ஆகியவற்றின் போது மக்கள்தொகை சார்ந்த சவால்களை நாடாளுமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவற்றில் முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பு, குடும்பங்களின் அளவு சுருங்குதல் மற்றும் தலைமுறைகளுக்கு இடையிலான மாறிவரும் தேவைகள் போன்ற அம்சங்களும் அடங்கும் என மக்களவைத் தலைவர் டான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல் கூறினார்.
மக்கள்தொகை மற்றும் நாட்டின் வளர்ச்சி தொடர்பான விவகாரங்கள் இறுதியில் அரசியல் ரீதியான கேள்விகளாகவே மாறுகின்றன என்று அவர் கூறினார்.
பொதுமக்களின் முன்னுரிமைகள் சட்டங்கள், நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் அரசாங்கத்தின் செலவினங்கள் வழியாக நடைமுறையில் பிரதிபலிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆசிய மக்கள்தொகை மற்றும் மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் (AFPPD) வருடாந்திர மாநாட்டில் பங்கேற்றவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்வில் உரையாற்றியபோது ஜோஹாரி இதனைத் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் AFPPD உலகளாவிய செயலக அலுவலகம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படுவது, மக்கள்தொகை மற்றும் மேம்பாடு தொடர்பான நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள்தொகையில் ஏற்படும் மாற்றங்கள் பல தசாப்தங்களாக நீடிக்கும் நிலையில், தேர்தல் அரசியல் பெரும்பாலும் குறுகிய காலகட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இந்தச் சூழலில் AFPPD-யின் பணி மிகவும் முக்கியமானதாக இருப்பதாக ஜோஹாரி கூறினார்.







