பெட்டாலிங் ஜெயா, செப் 3: சிலாங்கூர் மாநில அரசு அடுத்தாண்டு முதல், நிர்வாகம் மற்றும் பொதுச் சேவைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை விரிவுபடுத்தவுள்ளது.
இதற்காகப் பொருத்தமான தொழில்நுட்ப வழங்குநர்களை அடையாளம் காண சில ஹேக்கத்தான் (Hackathon) திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என புத்தாக்க- கலாச்சார விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் முகமட் ஃபஹ்மி ஙா தெரிவித்தார்.
“இவ்வாண்டு பொருத்தமான விநியோகஸ்தர்களைக் கண்டறிவதற்காக நாங்கள் சில ஹேக்கத்தான்களை நடத்துவதில் நேரத்தைச் செலவிட்டுள்ளோம். விரைவில், நடத்தப்பட்ட சில ஹேக்கத்தான்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.
இது வெறும் விலை பற்றிய விஷயம் மட்டுமல்ல, மாநில அரசின் முக்கிய செயல்முறைகளில் AI கூறுகளைப் புகுத்த அவர்கள் நமக்கு எவ்வாறு உதவ முடியும் என்ற அவர்களின் ஆற்றல் மற்றும் திறனைப் பொறுத்தது,” என்று இன்று எஸ்எஸ்2 (SS2) இல் , TEDUH @ MBPJ மையத்தைத் திறந்து வைத்த பிறகு ஊடகங்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

தனியார் துறையுடனான இந்த ஒத்துழைப்பு, மாநில அரசின் நிர்வாகம் மற்றும் சேவை வழங்கும் முறையில் இத்தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த நடவடிக்கை சிலாங்கூர் மாநிலத்தை ஒரு விவேக (Smart State) மாநிலமாக வலுப்படுத்துவதற்கும், மேலும் விரிவான முறையில் AI பயன்பாட்டை நோக்கி நகர்வதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இணையாக அமைந்துள்ளது என்றார்.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைவாகப் பதிலளிக்கும் ஓர் அரசாங்கம் அமைந்திருப்பது குறித்து மக்களும் அதிக உற்சாகமடைவார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
நகர நிர்வாகம் மற்றும் பல்வேறு பொதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மலேசியாவின் முதல் 'AI நகரம்' (Bandar AI) திட்டத்தைச் செயல்படுத்தும் முதல் மாநிலமாக மாறுவதை சிலாங்கூர் ஏற்கனவே இலக்காகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



