ஷா ஆலாம், ஆகஸ்ட் 31 — பொதுச் சுகாதாரத் துறையில் டிஜிட்டல் திறனை மேம்படுத்துவதற்காகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்த புதிய திட்டம், அரசு மருத்துவமனைகளில் மக்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கப் பெரிதும் உதவுமென சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாகச் சிலாங்கூரில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் நிலவி வரும் நெரிசலைக் குறைக்க இந்த முயற்சி மிக முக்கியமானது என்று அவர் விவரித்தார்.
"பொதுச் சுகாதாரத் துறையை விரைவாக டிஜிட்டல் மயமாக்குவதற்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதன் மூலம், அவசரப் பிரிவுகளில் நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தைக் குறைத்து, தேவைப்படுபவர்களுக்கு விரைவான உதவிகளை வழங்க முடியும்.
பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் இந்த சிக்கலை உணர்ந்து பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் காத்திருப்பு நேரம் நிச்சயம் குறையும் என நம்புகிறேன்," என்று அவர் இன்று மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
மலேசியாவின் 69-வது தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, நேற்று சிறப்புரை ஆற்றியப் பிரதமர், ஆறு உடனடி முயற்சிகளை அறிவித்தார்.
அவற்றில் முக்கியமாக, பொதுச் சுகாதாரத் துறையின் டிஜிட்டல் திறனை மேம்படுத்துவதற்காக 1 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்த நிதியின் கீழ், நாட்டின் 150 மருத்துவமனைகள் மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கிளினிக்குகளில் மின்னியல் மருத்துவப் பதிவு (Electronic Medical Record) முறை மற்றும் இணைய வசதி இணைப்புகள் மேம்படுத்தப்படவுள்ளன.




