கோம்பாக், ஆகஸ்ட் 30 - கள்ளக் குடியேறிகள், அகதிகள் பிரச்சனைகளை, மனிதநேயத்துடன் கூடிய சட்ட அமலாக்கம் மற்றும் தெளிவான கொள்கையின் அடிப்படையில் சரிசமமாகக் கையாள வேண்டும்.
அவ்விவகாரத்தில், உணர்வின் அடிப்படையில் நாடு செயல்பட முடியாது என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.
" உணர்வு அல்லது மனநிலையின் அடிப்படையில் அச்சமூகத்தினரைக் கையாண்டால் நாம் நாசி ( NAZI) போல ஆகிவிடுவோம். அது மிக ஆபத்தானது" என அவர் கூறினார்.
இங்குள்ள சுங்கை புசு தேசிய இடைநிலைப் பள்ளி மண்டபத்தில், கோம்பாக் நாடாளுமன்ற மக்களுடனான சந்திப்பில் கலந்துக் கொண்டப் பின்னர் , அமிருடீன் ஷாரி செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
அகதிகள் பிரச்சனை நாட்டிற்கு பெரும் சுமையாகவே உள்ளது. எனினும், மனிதநேய அடிப்படையில் சரிசமமாக அப்பிரச்சனையைக் கையாளும் ஒரு தெளிவான கொள்கை வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
அதே வேளை, குற்றச் செயல் அல்லது சட்டவிரோதக் குடியிருப்பு உட்பட சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடும் கள்ளக் குடியேறிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது அவசியமென்றார்.
இதனிடையே, கள்ளக் குடியேறிகள், அகதிகள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க, அரசாங்கம் நாட்டின் அனைத்து எல்லைக் கதவுகளையும் மூடி விடவும் முடியாது. சிரியா, காசா அகதிகள் விவகாரத்தில் அவ்வாறு செயல்பட முடியாது என அவர் குறிப்பிட்டார்.



