புத்ராஜெயா, ஆகஸ்ட் 27 - எதிர்வரும் மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள பக்காத்தான் ஹரப்பான் தேசிய முன்னணியுடன் ஒத்துழைக்கும் சாத்தியம் குறித்து ஆராயும்.
தற்போதைக்கு அந்த விவகாரம் இன்னும் தொடக்கக் கட்டத்திலே உள்ளது. எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன், அனைத்து சாத்தியங்களும் தீர ஆராயப்படுமென ஹரப்பான் தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.
இதன் தொடர்பில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்படுமெனவும், அதில் முன்வைக்கப்பட்ட விவகாரங்கள் ஹரப்பான் கூட்டணிக்கும் கெஅடிலான் கட்சியின் பார்வைக்கும் கொண்டுச் செல்லப்படும்.
உடன்பாடு இருந்தால் மட்டுமே அந்த ஒத்துழைப்பு உறுதிச் செய்யப்படுமென அமிரூடின் ஷாரி கூறினார்.
இன்று ஜாகிம் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்டப் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
அந்த ஒத்துழைப்பு தொடர்பான விபரங்கள் செப்டம்பர் 16-ஆம் தேதி மலேசியத் தினக் கொண்டாட்டத்திற்கு முன்பாக தெரியவருமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் மாநிலத் தேர்தலில், தேசிய முன்னணி ஹரப்பான் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழைப்பின் அனுபவமும் அந்த பேச்சு வார்த்தையின் போது கருத்தில் கொள்ளப்படுமென்றாரவர்.



