ஜகார்த்தா, ஆகஸ்ட் 24 : இந்தோனேசியாவில், காடுகளிலும் நிலத்திலும் பரவியிருக்கும் தீயைக், கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தொடங்கியுள்ளதாகவும், அடுத்த ஒரிரு வாரங்களுக்குள் அந்த நிலைமை முழுமையாகச் சரிசெய்யப்படும் என்றும் அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
தீயை அணைக்கும் பணிகளுக்காகப் பல ஹெலிகாப்டர்கள், ஒரு டஜனுக்கும் அதிகமான விமானங்கள், நூற்றுக்கணக்கான நீர் கிணறுகள் மற்றும் பம்புகள், அத்துடன் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் உட்பட கணிசமான வளங்கள் திரட்டப்பட்டுள்ளதாகப் பிரபோவோ கூறினார்.
"பல இடங்களில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பாதிப்புகள் தணியத் தொடங்கியுள்ளதாக நினைக்கிறேன். இன்னும் ஒன்று அல்லது இரு வாரங்களுக்குள் அனைத்தும் சரிசெய்யப்படும் என்று நம்புகிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.
பாலி, ஜெம்ப்ரானாவில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) நடைபெற்ற இந்தோனேசியாவின் 100 கிகாவாட் சூரிய சக்தி திட்டத் தொடக்கம் மற்றும் அதன் ஆரம்பத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட உரையில் அவர் அதனைக் கூறினார்.
இவ்வாண்டு உலகம் கடுமையான எல் நினோ (El Nino) வானிலை மாற்றத்தை எதிர்கொண்டு வருவதாகவும், இது வரலாற்றிலேயே மிகக் கடுமையான ஒன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் பிரபோவோ கூறினார்.
இதனால், இந்த வானிலை மாற்றத்தினால் ஏற்படும் ஆபத்துகளுக்கு எதிராக இந்தோனேசியா விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



