பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 25 - மேற்கு கடற்கரை நெடுஞ்சாலை ( West Coast Expressway-WCE) சிலாங்கூரின் வடப் பகுதிகளில் பொருளாதார- விநியோக வளர்ச்சியை ஊக்குவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நெடுஞ்சாலை நிர்மாணிப்பு, குறிப்பாக தஞ்சோங் காராங் மற்றும் சுங்கை பெசார் ஆகிய பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுமென WCE ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டன் ஆல்ஃபிரட் ஃபெலிக்ஸ் தெரிவித்தார்.
அதே வேளை, சிலாங்கூர்- பேராக் மாநிலங்களுக்கு இடையிலான நீண்ட தூரப் போக்குவரத்திற்கு இதுவொரு சிறந்த மாற்று வழியாக அமையுமெனவும் அவர் கூறினார்.
இந்த நெடுஞ்சாலை சிலாங்கூரின் வடப் பகுதிக்கும் கிள்ளான் பள்ளத்தாக்கிற்கும் இடையிலான போக்குவரத்து தொடர்பை மேம்படுத்தும்.
மேலும், பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும். மக்கள் வட சிலாங்கூரில் வசித்துக் கொண்டே மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு வேலைக்குச் சென்று வர இது ஊக்குவிக்கும் என்றும் லிண்டன் ஆல்ஃபிரட் ஃபெலிக்ஸ் குறிப்பிட்டார்.
மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையின் நிர்மாணிப்பு முழுமையாக நிறைவடைந்ததும், பயணிகள் தஞ்சோங் காராங்கிலிருந்து கிள்ளானுக்கு வெறும் அரை மணி நேரத்திற்குள் பயணிக்க முடியும்.
அதாவது பயண நேரம் கிட்டத்தட்ட பாதியாகக் குறையும்," என்று நேற்று இங்குள்ள கிரிஸ்டல் பிளாசாவில் (Crystal Plaza) நடைபெற்ற WCE ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

MEDIA SELANGOR
இந்த மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து தொடர்பு , பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டுவதோடு, மாநிலத்தின் வடக்குப் பகுதியில் புதிய நகரங்கள் மற்றும் வீட்டு வசதி மேம்பாடுகளை ஊக்குவிக்கும் என்றும் லிண்டன் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 21 -ஆம் தேதி, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையிலான வளர்ச்சி இடைவெளியைக் குறைப்பதில், குறிப்பாக வட சிலாங்கூரில் மேற்கு கரை நெடுஞ்சாலை ஒரு முக்கிய உந்துசக்தியாக இருக்கும் எனக் கூறியிருந்தார்.




