கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 - ஓணம் மலையாள சமூகத்தினர் கொண்டாடும் ஒரு பாரம்பரிய பண்டிகை மட்டுமல்ல.
குடும்ப - நட்புறவுகளை வலுப்படுத்தி, பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மலேசியர்களை ஒன்றுபடுத்தும் விழாவாகவும் அது திகழ்வதாக , அகில மலேசிய மலையாள சங்கத்தின் தலைவர் டத்தின் ஸ்ரீ ஷய்லா நாயர் தெரிவித்தார்.
நாளை கேரளாவில் மிக முக்கிய விழாவாக ஓணம் கொண்டாடப்படவிருக்கிறது. பாரம்பரியமாக அறுவடைத் திருநாளாக வரவேற்கப்பட்டாலும், அன்பு, அமைதி, சமத்துவம், பரிவு, நட்பு ஆகிய நற்பண்புகளை விதைக்கும் ஒரு பண்டிகையாக தற்போதைய கால கட்டத்தில் அது பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
இவ்வாண்டு, அகில மலேசிய மலையாள சங்கம், நாடு முழுவதுமுள்ள 18 மலையாள சங்கங்களை இணைத்து , தேசிய நிலையிலான ஓணம் பண்டிகையைக் கொண்டாடவுள்ளது.
'4.0 ஓணம் வன்னல்லோ' என்ற பெயரில் அடுத்த மாதம் செப்டம்பர் 12- ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா செக்க்ஷன் 19 , ஜஸ்மீன் பேங்க்வெட் மண்டபத்தில் அந்த விழா நடைபெறவுள்ளது. சிலாங்கூர் , கூட்டரசுப் பிரதேச மலையாள சங்கத்தின் ஒத்துழைப்புடன் அவ்விழா நடத்தப்படுகிறது.
இசை, நடனம் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் களை கட்டும் அந்த விழா சுமார் 800 வருகையாளர்களை ஈர்க்குமென ஷய்லா நாயர் நம்பிக்கைத் தெரிவித்தார்.



