ஷா ஆலாம், 24 ஆகஸ்ட்: தனது 80 வயது அண்டை வீட்டு முதியவருக்கு பலத்த காயம் ஏற்படுத்தியதன் தொடர்பில், விசாரணைக்கு உதவ 62 வயதுடைய ஆடவர் ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார்.
நேற்று காலை பினாங்கு, ஜார்ஜ்டவுன், ஜாலான் பேராக் (Jalan Perak) பகுதியில் நடந்த அச்சம்பவத்தில், தடுத்து வைக்கப்பட்ட நபர் தனது பக்கத்து வீட்டுக்காரரை இரும்பு கம்பியால் தாக்கியதாக 'பெரித்தா ஹரியான்' செய்தி வெளியிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நபரை குற்றவியல் சட்டப் பிரிவு 326-இன் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க, மாஜிஸ்திரேட் நுர்ஹனிசா எஸ் எச் சாகுல் அனுமதி அளித்தார்.
அந்த ஆடவர் இன்று முதல் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை தடுத்து வைக்கப்படுவார்.
நேற்று காலை 9.30 மணியளவில் நடந்த அச்சம்பவத்தில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, முதியவர் அவரது வீட்டின் முன்பு இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
தாக்கப்பட்ட முதியவரின் கைகள் மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் இன்னும் பினாங்கு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தென்கிழக்கு மாவட்டப் போலீஸ் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் அப்துல் ரோசாக் முகமட் தெரிவித்தார்.
முன்னதாக, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் முதியவரை இரும்பு கம்பியால் பலமுறை தாக்கியதும், அதன் பின்னர் முதியவர் தரையில் விழுந்து கிடப்பது போன்ற 15 வினாடிகள் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவி வைரலானது குறிப்பிடத்தக்கது.



