ஷா ஆலாம், 24 ஆகஸ்ட்: இன்றிரவு ஷா ஆலாமில் உள்ள அனேகா வால்க் (Aneka Walk) பகுதியில் , சுக்மா- மலேசிய விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா நடைபெறவுள்ளது.
சிலாங்கூர் இளவரசர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா சுல்தான் ஷரஃபுதீன் இத்ரிஸ் ஷா அல்ஹாஜ், போட்டியை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைக்கவுள்ளார்.
அவர் இரவு 8.45 மணியளவில் நிறைவு விழாவிற்கு வருகைத் தருவார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமட் தௌபிக் ஜோஹாரி ஆகியோரும் கலந்துக் கொள்ள உள்ளனர்.
இந்த விழாவில் 15 மாநில அணிகளின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெறும்.
இரவு 10.15 மணியளவில் விழாவின் உச்சக்கட்டமாக சிறந்த விளையாட்டு வீரர், சிறந்த வீராங்கனை மற்றும் 22-வது சுக்மா போட்டியின் ஒட்டுமொத்த வெற்றியாளர் அணிக்கான விருதுகளை சிலாங்கூர் இளவரசர் ராஜா மூடா வழங்கவுள்ளார்.
சுக்மா போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று காலை 11.25 மணி நிலவரப்படி சிலாங்கூர் மாநிலம் 97 தங்கம், 72 வெள்ளி மற்றும் 69 வெண்கலம் என மொத்தம் 238 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
சிலாங்கூருக்குப் பிறகு, 2028-ஆம் ஆண்டு 23-வது சுக்மா போட்டியை கிளந்தான் ஏற்று நடத்தும்.







