கோம்பாக், ஆகஸ்ட் 22: பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் மற்றும் வள மையங்களை (Resource Centres) மேம்படுத்துவது மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை வலுப்படுத்துவதோடு, அவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் தங்களது படிப்பைத் தொடர்வதற்கான சிறந்த ஆயத்தமாகவும் அமையுமென சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமீருடின் ஷாரி தெரிவித்தார்.
இவ்விரு வசதிகளையும் தரம் உயர்த்துவதற்கான முயற்சிகள், எதிர்காலத் தேவைக்கான துறைகளைக் கற்றுக்கொள்வதில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க உதவும் என அவர் கூறினார்.
"கணினி ஆய்வகம் மற்றும் வள மையம் ஆகிய இரு இடங்களை மேம்படுத்துவது மாணவர்களின் ஊக்கத்தையும், அங்குள்ள வசதிகளையும், சூழலையும் மேம்படுத்த உதவும் என்று நான் கருதுகிறேன்." இங்கு கொண்டு வரப்பட்டவற்றில் சில சிறிய உபகரணங்களும் அடங்கும்... எங்களிடம் முப்பரிமாண அச்சுப்பொறி (3D printer), லேசர் அச்சுப்பொறி (laser printer) உள்ளன, மேலும் புதிய கணினிகளையும் வழங்கியுள்ளோம்.
பரந்த இடவசதி கொண்ட வள மையமும் குறிப்பிட்ட சில புதிய வசதிகளும் இங்கு உள்ளன," என்று அமிருடின் ஷாரி கூறினார்.
இன்று கோம்பாக்கில் உள்ள சுங்கை கெர்தாஸ் தேசிய இடைநிலைப் பள்ளிக்கு (SMK Sungai Kertas) வருகை தந்தபோது, புதிய கணினி ஆய்வகத்தையும், புதுப்பிக்கப்பட்ட வள மையத்தையும் திறந்து வைத்தப் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த வசதிகள் நுண்கலை , பொறியியல் , கட்டிடக்கலை , மற்றும் வடிவமைப்பு உட்பட உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள பல்வேறு கல்வித் துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளன எனவும் அவர் கூறினார்.




