ஷா ஆலாம், ஆகஸ்ட் 21: பூச்சோங் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ள 'சிலாங்கூர் சாரிங்' (Selangor Saring)திட்டத்தின் மூலம் பல்வேறு சுகாதாரப் பரிசோதனைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறவுள்ளனர்.
மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டம், பண்டார் கின்ராரா 5-இல் உள்ள MBSJ சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் பல்நோக்கு மண்டபத்தில் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை நடைபெறுமென கின்ராரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் ஸி ஹான் தெரிவித்தார்.
இதயப் பரிசோதனை, இரத்த அழுத்தம், கண், புற்றுநோய், பல், பிசியோதெரபி மற்றும் பல இலவச சுகாதாரப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள அனைவரும் குடும்பத்துடன் திரளாக வருமாறும், ஆரோக்கியமே நமது மிக உயர்ந்த சொத்து என்பதால் இந்த இலவசப் பரிசோதனை வாய்ப்பைத் தவறவிடாதீர்கள் என்றும் அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முகாமில் இதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் சிறுநீரகம் போன்ற தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் வழங்கப்படும். அதோடு குடல், புரோஸ்டேட், கருப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோய் போன்ற புற்றுநோய் பரிசோதனைகளும், பார்வை குறைபாடு, குளுக்கோமா மற்றும் விழித்திரை பிரச்சனைகளுக்கான கண் பரிசோதனைகளும் இதில் அடங்கும்.
மேலும், பல் மற்றும் காது பரிசோதனைகளுடன் பிசியோதெரபி சிகிச்சையும் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த இலவசப் பரிசோதனை முகாமில் பங்கேற்பதற்கான முன்-பதிவுகள் தற்போது SELangkah செயலி மூலம் தொடங்கப்பட்டுள்ளன.



