ஷா ஆலம், ஆக. 21 — ஷா ஆலாம், செக்க்ஷன் 19 பெர்சியாரான் ஜுப்லி பேராக் (Persiaran Jubli Perak) சாலையில் ஏற்பட்ட திடீர் குழியைச் சரிபார்க்க அங்கு அவசரப் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாகனமோட்டிகளின் பாதுகாப்புக்காக, அப்பகுதியில் பாதுகாப்பு கூம்புகளை வைத்து , தனிமைப்படுத்தும் உடனடிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஷா ஆலம் மாநகராட்சி தெரிவித்தது.
"இந்த திடீர் குழி, அப்பகுதியில் உள்ள பொதுக் கழிவுநீர் குழாய் சேதமடைந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என இண்டா வாட்டர் கன்சோர்டியம் (IWK) மேற்கொண்ட ஆரம்ப சோதனையில் தெரிய வந்திருப்பதாக, அம்மாநகராட்சியின் பேச்சாளர் தெரிவித்தார்.
இண்டா வாட்டர் நிறுவனம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், அவசரப் பழுதுபார்க்கும் பணிகளையும் செய்யும். பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஷா ஆலாம் மாநகராட்சி இண்டா வாட்டர் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும். அதோடு பழுதுபார்க்கும் பணிகளையும் கண்காணிக்கும் என்றும் அம்மாநகராட்சி கூறியுள்ளது.
முன்னதாக, செக்க்ஷன் 19-ல் ஏற்பட்ட இந்தத் திடீர் குழி குறித்து பலர் திரெட்ஸ் (Threads) தளத்தில் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியதுடன் பலரது கவனத்தையும் ஈர்த்தது.



