புத்ராஜெயா, ஆகஸ்ட் 18 — பொருட்கள் வரி (GST) மற்றும் விற்பனை வரி (SST) ஆகியவற்றை இணைக்கும் முன்மொழிவை அரசாங்கம் ஆய்வு செய்யும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
எனினும், மலேசியாவின் தற்போதைய தேசிய வரி முறையாக SST தொடர்ந்து இருக்கும் என்றும், GST-யில் உள்ள ஏற்றுக்கொள்ளக்கூடிய சில அம்சங்கள் மட்டும் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மக்கள் அனைவரையும் பாதிக்கும் வரி முறையை அரசாங்கம் விரும்பவில்லை என்று கூறிய அன்வார், GST அமல்படுத்தப்பட்டால் குறைந்த வருமானம் கொண்டவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் வரிச்சுமையை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்தார்.
தற்போதைய வாழ்க்கைச் செலவு சூழ்நிலையில் அது மக்களுக்கு கூடுதல் சுமையாக மாறக்கூடும் என்றும் அவர் விளக்கினார்.




