ஷா ஆலம், 17 ஆகஸ்ட்: இங்குள்ள செக்க்ஷன் 14-இல் அமைந்திருக்கும் சுல்தான் சலாஹுதீன் அப்துல் அஜீஸ் ஷா மாநில பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள குன்றுப் பகுதியில் இன்று ஏற்பட்ட காட்டுத் தீ, சுமார் 7 ஏக்கர் அல்லது 2.83 ஹெக்டேர் பரப்பளவைப் பாதித்தது.
மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறைக்கு மதியம் 1:01 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதன்பின் நான்கு நிமிடங்களில் ஷா ஆலம் தீயணைப்பு நிலைய குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தடைந்ததாகவும் சிலாங்கூர் தீயணைப்புத் துறை தெரிவித்தது.
இந்தத் தீ விபத்து காட்டுப் பகுதியை மட்டுமே பாதித்துள்ளது; எந்தவொரு கட்டிட அமைப்பிற்கோ பொதுமக்களுக்கோ பாதிப்பு ஏற்படவில்லை என சிலாங்கூர் தீயணைப்புத் துறையின் செயல்பாட்டு மையம் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
முன்னதாக, இக்காட்டுத்தீ தொடர்பான புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவின. அதில் ஷா ஆலம் பகுதியைச் சுற்றிலும் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்திருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.




