ஷா ஆலம், ஆகஸ்ட் 16 - எதிர்வரும் தேர்தல்களுக்கான திட்டங்களை வகுக்கவும், செயல்முறைகளை ஒருங்கிணைக்கவும் கெஅடிலான் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரிக்கு தேர்தல் இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் ஒட்டுமொத்த தேர்தல் இயந்திரமும், தெளிவான தலைமை மற்றும் வழிகாட்டுதலுடன் ஒரே சீராக இயங்குவதை உறுதிச் செய்ய அந்த முடிவு எடுக்கப்பட்டதாக கெஅடிலான் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
"எதிர்காலத் தேர்தல்களுக்கான பணிகளைச் செய்ய அமிருதினுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் இனி தனித்தனி துணை அமைப்புகளோ அல்லது மாற்று அமைப்புகளோ இருக்கக்கூடாது என்று நான் தலைமைத்துவத்திடம் கூறியுள்ளேன்.
ஒரே அமைப்பு, ஒரே தலைமை, ஒரே வடிவம். அமிருதின் தான் அனைத்தையும் தீர்மானிப்பார்," என்று மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற கெஅடிலான் தேசிய மாநாட்டின் நிறைவுரையின் போது அன்வார் கூறினார்.
மேலும், பிரதமரின் அலுவலகத்தில் இருந்து செயல்முறை ஒருங்கிணைப்பை தமது மூத்த அரசியல் ஆலோசகர் தெங்கு டத்தோ ஸ்ரீ சஃப்ருல் அப்துல் அஜீஸ் கவனிப்பார் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
கெஅடிலான் அரசியல் பிரிவிலும் இருக்கும் தெங்கு சஃப்ருல், கெஅடிலான் தலைவர் அலுவலகத்திற்கும் கட்சியின் செயலகத்திற்கும் இடையே சுமூகமான ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் பொறுப்பை ஏற்பார் என அவர் குறிப்பிட்டார்.






