ஷா ஆலம், ஆகஸ்ட் 15 : 2026 சிலாங்கூர் சுக்மா,பாரா சுக்மா போட்டிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின.
அப்போட்டியின் தொடக்க விழாவின் கண்கவர் நிகழ்ச்சியும் , விளையாட்டாளர்கள், ரசிகர்கள் ஆகியோரின் உற்சாக முழக்கமும் இன்றைய இரவு ஷா ஆலம் சுதந்திர சதுக்கத்தை (Dataran Kemerdekaan Shah Alam) சூழ்ந்திருந்தது.
சிலாங்கூர் மந்திரி பெசார் கழக(MBI) தலைமையிலான இந்த தொடக்க விழாவை , சிலாங்கூர் இளவரசர் தெங்கு அமீர் ஷா அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

அரச மலாய் இராணுவப் படைப் பிரிவின் ஜாலூர் கெமிலாங் கொடி அசையுடன், 15 மாநிலக் குழுக்கள் மற்றும் புரூணை நாட்டின் அணிவகுப்புடன் தொடக்க விழா கோலாகலமாகத் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து, மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி உரையாற்றினார்.
இந்த விளையாட்டு விழாவை வெற்றிகரமாக்கிய அனைத்து தரப்பினருக்கும் தனது நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.

தமதுரையில், விளையாட்டு மேம்பாட்டை வலுப்படுத்துவதிலும், அதிக அளவிலான உயர் ஆற்றல் கொண்ட விளையாட்டு வீரர்களை உருவாக்குவதிலும் சிலாங்கூர் மாநிலத்தின் கடப்பாட்டினை அமிருதின் உறுதிப்படுத்தினார்.
அதையடுத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா, 2026 சுக்மா, பாரா சுக்மா போட்டிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இதன் மூலம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு (கடைசியாக 1998 இல் நடத்தியது) இந்த இரு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் சுக்மா விளையாட்டு விழா மீண்டும் சிலாங்கூருக்குத் திரும்பியுள்ளது.
முன்னதாக கலை,கலாச்சாரம், இசை மற்றும் தொழில்நுட்பக் கூறுகளை இணைத்த சிறப்புப் படைப்பாற்றல் அரங்கத்தை மிளிரச் செய்தது.


அந்த அரங்கேற்றத்திற்குப் பின்னர், விளையாட்டு உணர்வு மற்றும் தேசிய ஒற்றுமையின் அடையாளமாக 2026 சுக்மா கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேசிய இளையோர் டென்பின் பௌலிங் விளையாட்டு வீரரான முகமட் அய்மான் ஷாஹின் சுலைமான் (Muhammad Aiman Syahin Sulaiman) தலைமையில் விளையாட்டு வீரர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வும் நடைபெற்றது.

பின்னர், விளையாட்டு வீரர்களின் பயணம் மற்றும் வெற்றிக்கான அவர்களின் லட்சியங்களை விவரிக்கும் இரண்டாவது சிறப்புப் படைப்பு அரங்கேறியது.
இந்த விழாவின் உச்சக்கட்டமாக, விளையாட்டு வீரர்களின் போராட்ட குணம் மற்றும் தியாகத்தின் அடையாளமாக 2026 சுக்மா, பாரா சுக்மா போட்டியின் தீப்பந்தம் ஏற்றி வைக்கப்பட்டது.


37 விளையாட்டுப் பிரிவுகளில் இருந்து மொத்தம் 468 போட்டிகள் நடத்தப்படும் இந்த சுக்மா விளையாட்டுப் போட்டி, இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து அனைத்துலக அரங்கிற்கு கொண்டுச் செல்லும் தளமாகத் தொடர்ந்து விளங்கி வருகின்றது.





