புத்ராஜெயா,ஆகஸ்ட் 14 - இவ்வாண்டு நாட்டின் 20 பொதுப் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்பை (Bachelor's Degree) மேற்கொள்ள மொத்தம் 82,092 இடங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
யுபியுஆன்லைன் (UPUOnline) வழியாகப் பெறப்பட்ட, தகுதிப் பெற்ற 107,875 விண்ணப்பங்களில் 76.10 விழுக்காட்டினர் பொதுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடரத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கல்வித் தவணையில் மொத்தம் இளங்கலைப் பட்டப்படிப்புக்கான 1,146 பாடத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கை, தகுதி பெற்ற மாணவர்களின் மெரிட் புள்ளிகளின் அடிப்படையில், அதிக புள்ளிகளிலிருந்து குறைந்த புள்ளிகள் வரை வரிசைப்படுத்தப்பட்டு, முற்றிலும் தகுதித் திறமையின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்தது.
பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காத மாணவர்கள், உயர்கல்வி அமைச்சின் UPUOnline வழியாக மேல்முறையீடு செய்வதற்கான இரண்டாவது வாய்ப்பை வழங்கியுள்ளது.
இந்த மேல்முறையீட்டு விண்ணப்பம் இன்று நண்பகல் 12:00 மணி முதல் தொடங்கி, வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 5:00 மணி வரை 10 நாட்களுக்குத் திறந்திருக்கும்.







