சென்னை, ஆகஸ்ட் 14 - ஓர் அழிந்துவரும் நிலையில் உள்ள கிப்பன் (Lar Gibbon) குரங்கைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சுவது போன்ற வீடியோவை தமிழ் சினிமா நடிகர் விக்ரம் வெளியிட்டதைத் தொடர்ந்து, அந்த விலங்கு அவரிடம் எவ்வாறு வந்தது என்பது குறித்து இந்திய வனத்துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விருது பெற்ற நடிகரான விக்ரம், கடந்த திங்கட்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லார் கிப்பன் குரங்கைக் கட்டிப்பிடித்து விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த கிப்பன் குரங்கு எவ்வாறு ஒரு தனியார் வீட்டிற்கு வந்தது, அதன் உடைமை மற்றும் இடமாற்றம் தொடர்பான விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து மாநில வனத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
எனினும், அந்த விலங்கு கடத்தப்பட்டது என்றோ, அல்லது விக்ரம் அதைச் சொந்தமாக வைத்திருந்தார் அல்லது இந்தியாவிற்குள் கொண்டு வந்ததில் அவருக்குத் தொடர்பு இருக்கிறது என்றோ அதிகாரிகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இந்த சர்ச்சை குறித்து விக்ரம் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
தென்கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்ட லார் கிப்பன் குரங்குகள், அனைத்துலக அளவில் வர்த்தகம் செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட சிறிய வகை மனிதக்குரங்குகள் ஆகும்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள விக்ரமின் உறவினர் ஒருவரின் வீட்டில் அந்த விலங்கு வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டப்பூர்வமாகத் தேவையான அனுமதிகளும் ஆவணங்களும் இருந்தால், தனிநபர்கள் லார் கிப்பன் குரங்கை வீட்டில் வைத்திருக்க முடியும் என்று மாநில முதன்மை தலைமை வனவிலங்கு காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா தெரிவித்தார்.
"இந்த லார் கிப்பன் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் பின்னரே அது சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டதா என்பதைச் சொல்ல முடியும்" என்று அவர் கூறினார்.
இச்சம்பவம் தேசிய அளவில் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

லார் கிப்பன்கள் பொன்னிற அல்லது அடர் பழுப்பு நிற உரோமங்களால் மூடப்பட்ட சிறிய வகை மனிதக்குரங்குகள் ஆகும். அவற்றின் முகத்தைச் சுற்றி ஒரு தனித்துவமான வெள்ளை நிற உரோம வளையம் இருக்கும்.
இவை தாய்லாந்து, மியன்மார் மற்றும் மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் உள்ள வெப்பமண்டலக் காடுகளில் சிறிய குடும்பக் குழுக்களாக வாழ்கின்றன. வாழிட இழப்பு, வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத செல்லப்பிராணி வர்த்தகம் போன்றவற்றால் இவற்றின் எண்ணிக்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதால், இந்த இனம் 'அழிந்துவரும் இனம்' எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.



