ஷா ஆலாம், ஆக்ஸ்ட் 8 - SARA எனும் அடிப்படை ரஹ்மா உதவித் திட்டத்தின் கீழ் பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை வாங்குவதற்கும் அனுமதிப்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
இந்த ஆலோசனையை பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமை தாங்கும், பயனீட்டாளர், வாழ்க்கைச் செலவினங்களுக்கான தேசிய செயற்குழுவின் (Naccol) பரிசீலனைக்கு சமர்ப்பிக்க உள்ளதாக துணைப் பிரதமர் அகமட் சாஹித் ஹமிடி தெரிவித்தார்.
தற்போது இந்த மாதாந்திர திட்டத்தின் கீழ் முட்டை, ரொட்டி, டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் உறைந்த உணவுகள் உள்ளிட்ட 15 வகையான அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன;
எனவே, புதிய மற்றும் ஆரோக்கியமான உணவுகள் மக்களுக்கு எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்ய இந்த புதிய நடவடிக்கை முன்மொழியப்பட்டுள்ளது.
தற்போது இந்த மாதாந்திர உதவித் திட்டம் மூலம் மலேசியாவில் உள்ள 3.7 மில்லியன் குடும்பங்கள், 1.3 மில்லியன் தனித்து வாழும் முதியவர்கள் மற்றும் 3.1 மில்லியன் தனிநபரான இளம் வயதினர் என மொத்தம் 8.1 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இது தவிர, இதே திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 18 வயதுக்கு மேற்பட்ட 22 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 100 ரிங்கிட் ரொக்க உதவியும் வழங்கப்பட்டது.
முன்னதாக, வாழ்க்கைச் செலவினக் குழுவின் இந்த கூட்டத்தில் உணவு உதவி தவிர வேறு சில முக்கிய முடிவுகளும் விவாதிக்கப்பட்டன.
குறிப்பாக, எளிய மக்களைப் பாதுகாக்கும் வகையில் மானிய விலையிலான அரிசித் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், உள்நாட்டு வெள்ளை அரிசி கொள்கையை சமநிலைப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மருத்துவத் துறையில் தனியார் மருத்துவச் செலவுகளைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதை எளிதாக்கவும் 'RESET' என்ற திட்டத்தின் கீழ் 11 புதிய முயற்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
மேலும், கல்வித் துறையில் கடந்த ஆண்டு மட்டும் மாற்றுக்கல்வி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் சுமார் 62,937 மாணவர்களுக்கு 589.6 மில்லியன் ரிங்கிட் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்பு கிடைப்பதை அரசு தொடர்ந்து உறுதி செய்யும் என்றும் துணைப் பிரதமர் தெரிவித்தார்.




